Wednesday, April 8, 2020

இட்லி புராணம்...



 
                


இந்த இட்லி இருக்கிறதே சார் இட்லி, அதை இத்தனை விதமாக சாப்பிட முடியுமா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் நமக்கு ஏற்படும் வண்ணம் நம்மவர்கள் "உள்ளே இறக்கும்" நளினம் இருக்கிறதே...அதில் துவங்குகிறது ந‌ம் இட்லி புராணம்.


சிலர், இட்லிக்குள் தங்களுக்கு ஏதேனும் ரகசிய செய்தி இருக்கிறதா என்பது போல் சுரண்டிப் பார்ப்பார்கள். சிலர், இட்லியின் இரண்டு பக்கங்களையும் கண்ணாடியில் முகம் பார்ப்பது போல திருப்பிப் பார்ப்பார்கள். சிந்தனை சிகரங்கள் சில பேர் ஒரு துண்டு இட்லியை பிய்த்து கைகளில் வைத்துக் கொண்டே பல நிமிடம் உரையாடுவார்கள். உரையாடல் உச்சத்தில் இருக்கும் பொழுது வாய் வரைக்கும் இட்லி வந்து வந்து போகும்.

எப்படி இன்று தனிக் கட்சி ஆட்சி என்பது ந‌ம் நாட்டில் சாத்தியமில்லையோ அது போல், சட்னி அல்லது சாம்பார் கூட்டணி இன்றி எந்த ஒரு தட்டிலும் இட்லி ஆட்சி செய்ய முடியாது. சிலர் இட்லியின் துண்டை சாம்பாரில் போட்டு அது மூழ்கும் வரை காத்திருப்பார்கள். அந்த இடைவெளியில் வாழ்க்கையை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து விடுவார்கள். சாம்பாரில் முக்கிய பின் சட்னியை லேசாக தொட்டு சாப்பிடுவதும், முதலில் சட்னியில் இட்டபின் சாம்பாரில் முக்குவதுமாய் இரு வேறு மனித பிரிவுகள் இட்லி சாப்பிடும் முறையை உலகில் நிர்வகிக்கின்றன.


முன்னரெல்லாம் "பார்சல்" இட்லியை இலையில் வைத்து பேப்பரில்தான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேல் இலையை நீக்கினால் அடி இலையில் நசுக்கப்பட்ட சட்னியின் தரிசனம் கிடைக்கும். அந்த இலை நீக்கும் நொடி அற்புதமானது. சட்னி மெல்ல மெல்ல காட்சி கொடுக்கும் பொழுது, அளவு சரியாக இருக்கிறதா, குறைவாக வைத்து விட்டாரா என்று சராசரி உலகில் விடப்பட்ட நம் மேன்மைமிகு ஆன்மா பரிதவிக்கும் நொடி அது.

இவ்வாறு பேப்பரில் இட்லி பார்சல் வாங்கும் பொழுது, சாம்பாருக்கு தூக்கு வைத்திருக்கிறீர்களா என்று பார்சல் போடுபவர் கேட்பார். இரண்டு இட்லி பார்சல் சொல்லி விட்டு குடம் சைஸில் இருக்கும் தூக்கை நீட்டும் புத்திசாலிகள் நம்மில் பலர் இருந்தார்கள். ஒட்டல்காரரோ, "நான் எத்தனுக்கு எத்தன்டா" என்பது போல் ஒரு நக்கல் சிரிப்புடன், தற்போது அணைகளில் இருக்கும் நீர் அளவு போல் பெரிய தூக்கின் அடியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தெரிவது போல் சாம்பார் ஊற்றித் தருவார். "இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க" என்று சொல்லாத வாய் தமிழ் நாட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இப்பொழுதோ, எந்த பேச்சுவார்த்தைக்கும் வழியின்றி plastic கவரில் மெளனமாகி கிடக்கிறது சாம்பார்.

இப்படி ஊரெங்கும் உலா வரும் இட்லி, சில வருடங்களாக மினி இட்லி அவதாரமும் பல ஓட்டல்களில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் உணவுக்குச் சொல்லி விட்டு காத்திருந்த போது விலைப் பட்டியல் கண்ணில் விழுந்தது. அதில் மினி இட்லி
(3cm) என்று bracket போட்டிருந்தார்கள். நான் கணிதம் பயின்றவன் என்ற கர்வம் ஏற்படும் வண்ணம் மூளை ஒரு கேள்வி எழுப்பியது ‍ இட்லியோ வட்ட வடிவம். 3cm என்பது அதன் diameter or radius? அதை விட, இவ்வாறு இட்லியின் அளவை எழுத வைக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? ஒரு நிமிடம் ஓட்டலில் அனைவரும் scale உதவியுடன் இட்லியை அளந்து அளந்து சாப்பிடுவது போல் காட்சி மனதில் தோன்ற, பதறியபடி கனவையும் கணிதத்தையும் விரட்டினேன்.

நான் இட்லி சாப்பிடும் பாணியே தனி,சட்னி சாம்பார் என்றால் இட்லிகளை (முதலில் மூன்று,அப்புறம் இரண்டு) சாம்பாரை ஒரு நான்கு கரண்டி எடுத்து இட்லிகளின் தலை மேல் அபிஷேகம் செய்து,பக்கத்தில் தேங்காய் சட்னி வைத்து,இட்லியை விண்டு அபிஷேகம் செய்த சாம்பாரில் நன்றாக புரட்டி எடுத்து திரும்ப கிட்னியில் புரட்டி,இரண்டும் நீக்கமற கலந்து உள்ளே தள்ளுவேன்.

நெய் இருந்தால் சூடான இட்லிமேல் விரலால் அழுத்தி பல பள்ளங்களை உருவாக்கி (விரல் சுடும்தான்) அதில் முதலில் நெய்யை கீழே வழியாத அளவு விட்டு, இட்லி பொடியை ஒரு ரெண்டு மில்லி மீட்டர் உயரத்துக்கு சமமாக பரப்பி,அதன்மேல் திரும்பவும் நெய் விட்டு குழைத்து,முதலில் சுற்றி உள்ள (சரியாக இட்லி பொடி படாத இடங்கள்) ஏரியாவை காலி  பண்ணிவிட்டு அப்புறம் நடு ஏரியவுக்கு வரணும். அப்பப்பா,அந்த சுவை..... (சுவை மாற்ற,பெருங்காய இட்லி பொடி, பூண்டு இட்லிப்பொடி, எள்ளு இட்லிப்பொடி இப்படி பல ஐட்டம் இருக்கிறது).

 


அப்புறம் இன்னொரு ஐட்டம், இது எங்க வீட்டு ஸ்பெஷல் 'உப்புமிளகு' என்று எங்க பாட்டி ரெசிபி (முதலில் மிளகு வத்தல் உப்பு போட்டு நன்றாக தண்ணிவிடாம அரைத்து விட்டு,அதனுடன் தேங்காய்த்துருவல் பூண்டு சேர்த்து நன்கு அரையாமல் எடுக்கணும்) அதில் தேங்காய் எண்ணெய் விட்டு குழப்பி,இட்லியை தொட்டு சாப்பிடணும், பாதி சொர்கம் தெரியும்.  



"என்னப்பா நீ? பதிவில் எப்போதும் "கருத்து" சொல்வாய். இட்லி புராணத்தில் punch message இல்லையா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இட்லி வைத்தே ஒரு பஞ்ச் மெசேஜ் ரெடி பண்ணி விடலாம்...

இந்த இட்லியை பாருங்கள்...சாதி, மதம் என்று வேறுபட்டு அடித்துக் கொள்ளும் சமூகத்தில் இட்லியை தீண்டாதவர்கள் உண்டா? அமைதியின் வண்ணமான வெள்ளை நிறத்துடன் சமூக நல்லிணக்கத்தின் சான்றாக இருக்கிறதே சார் இட்லி. வர்க்க பேதத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடங்காய்ச்சிகள் "அக்கா கடை இட்லி" சாப்பிடுகிறார்கள். "rich" மக்கள் நட்சத்திர ஓட்டலில் "rice cake" சாப்பிடுகிறார்கள். உள்ளே போவது என்னமோ அரிசியும் உளுந்தும் தான். நடுத்தர வர்க்கமோ, தாங்கள் பிசாக்களுடன் பிறந்து பர்கர்களிலேயே வளர்ந்தது போல பாவனை காட்டினாலும், அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் துரத்தி, இப்போது pizza கடைகளிலும்  coffee day உள்ளேயும் புகுந்து, நீக்கமற நிறைந்து தன் ஆளுமையை பறைசாற்றி கொண்டிருக்கிறதே சார் நம் இட்லி! நம்மூரில் யார் யாரோ "சமூக நீதி காவலர்" பட்டத்துடன் உலா வருகிறார்கள். இட்லிக்கு அந்தத் தகுதி இல்லையா சார்? நீங்களே சொல்லுங்கள்...

Monday, January 13, 2020

எழுத மறந்த கதை. பாடலும் கூடலும் 2




நம்மில் சிலருக்கு மட்டுமே சிறப்பான உணவை சமைக்க தெரியும். ஆனால் நிறைய பேருக்கு சிறப்பான உணவை ரசித்து உண்ணத்தெரியும். அதுபோல, சிறப்பான பாடலை தயாரிக்க ராகம்தாளம் போன்ற நுட்பமான ஞானம் வேண்டியிருப்பினும் அப்பாடல்களை ரசித்து உண்ண அதை உள்வாங்கி அனுபவிக்கும் உணர்வு போதும்,அந்த உணர்வின் அடிப்படையில் ஆனது இந்த பதிவு.


இன்றைய அர்த்தமின்மை நேற்றைய அர்த்தத்தை இன்னும் ஆழமாக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இன்றைய சத்தமிக்க அர்த்தமற்ற பாடல்கள் அன்றைய பாடல்களின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட உதவுகிறது.

இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளப்படும் பாடல்கள் மூலம் நீங்கள் தங்கிய ஏதோ ஒரு காலத்தை நீங்களே நினைவில் மீட்டெடுக்க முடியுமானால் அதுவே எனது வெற்றி.

பல‌ முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் (''அமுதே தமிழே" /   Suseela , Uma Ramanan / கோவில் புறா / 1981) துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

"
அமுதே தமிழே பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும் மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!

இந்தப் பாடல் "கோவில் புறா" என்று கண்டறிந்து, அதன் மூலம் "வேதம் நீ" மற்றும் "சங்கீதமே" பாடல்களுக்குள் நுழைந்து...

"
வேதம் நீ" பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.


சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல "சங்கீதமே" பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்  humming  நம்மை ஒரு சோக கரைசலில் முக்கி எடுப்பதை உணர்தேன்.

கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?

"
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்" என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே "ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?" என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?







அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2)
சுகம் பல தரும் தமிழ்ப் பா (2)
சுவையொடு கவிதைகள் தா (2)
தமிழே நாளும் நீபாடு (2)
{அப்படி இல்லப்பா, தம்பி எப்படி அழகா பாடினான் நீ பாத்தியா} தமிழே நாளும் நீபாடு
தமிழே நாளும் நீபாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊண்மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் (2) பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணம் ஏது
என் மனதில் தேன்பாய தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா கவிதைகள் தா
தமிழே நாளும் நீபாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே




நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் "வண்ணம்" முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?



அன்று "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" பாடலை குழலில் வடித்தபின், "உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?" என்றார். "ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி" என்றேன். அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், "நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்." என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌ வார்த்தைகளுடன் நின்றேன் நான்.

இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,

மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.

ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு "கனம்" தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.

இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.

ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும்  வயலின் அமைதி காத்து, "பாதச்சுவடுகள் போகும்" மற்றும் "ஆலம் விழுதுகள் போலே" ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.

இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் "பாத்திரம்" வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!

ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...

மற்ற இருவர் பாடுகையில் "ஆலம் விழுதுகள் போலே" வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!

"ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி". அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?


https://www.youtube.com/watch?v=9qWasKLfLB0   (3 Versions Of Oorellam Un Paattuthaan)